எல்லா நேரங்களிலும், இடங்களிலும் என் அன்பை தெரிவிக்க வேண்டியவர்களும், என் நன்றிகளை பகிரவேண்டியவர்களும் அநேகம்பேர் இருக்கத்தான் செய்கிறார்கள், அது நாளுக்குநாள் வளர்ந்துகொண்டே வருவதுமான ஒரு பட்டியலாகவும் இருக்கிறது.
அடர் இசை வழியும் கென்ய கடற்கரை இரவு விடுதிகளில் சந்தித்த என் தோழி கிரேஸ், என் கென்ய கதைகளுக்கு ஊற்றுக்கண்ணாய் இருந்த அவளுடைய மூன்று வருட நாட்குறிப்பு, அவளின் தொழில்முறைத் தோழிகள்,எத்தனையோ இடர்பாடுகளின் மத்தியில் எனக்காய் காத்திருந்துதங்கள் அனுபவத்தை உணர்த்தியவர்கள் , பகிர்ந்தவர்கள். கென்யாவில் செக்ஸ்டிராபிக்கிங் ஊடே மலிந்தியிலும், வட்டாமூவிலும் சந்தித்த சில சிறுவர்கள், சிறுமிகள் எத்தனை நன்றிக்குரியவர்கள், LGBT நண்பர்கள் எத்தனை கற்றுக்கொடுத்திருக்கிறார்கள், எத்தனை துரோகங்கள் அவர்களின் மூலம் அறிந்திருக்கிறேன், வழிநெடுக என்னை உடன்தூக்கி அலைந்திருக்கிறார்கள், எல்லாமே பிக்ஸல்பிக்ஸலாய் சேர்ந்ததுதானே நான் , எல்லாரும்தானே நான்.
கென்யாவின் ஒரு மழைநாளில், உணர்கொம்புகளை அசைத்த படி நகர்ந்து கொண்டிருக்கும் ஒரு நத்தை, கழிப்பறை ஜன்னலில் ஒருமுனையில் இருந்து மறுமுனைக்கு நகர்ந்து கொண்டிருக்கிறது. இத்தனை தூரம் வருவதற்கு எத்தனை காலம் எடுத்திருக்கும், ஒரு முனையில் இருந்து மறுமுனைக்கு எப்போது போய்ச்சேரும்? எதற்காக மறுமுனைக்குப் போக வேண்டும்? என்ற கேள்விகளுக்கு பதில் இல்லாமல் இருக்காது தானே? நாம் கவனத்தில் கொள்ளாத காலத்தில் அதனதன் நகர்வுகள் அதனதன் போக்கில் நடந்து கொண்டு தான் இருக்கும், அப்படி ஒரு நகர்வே நம் வாழ்வு என்று போதித்த ”வழிஆசான்கள்” அத்தனை பேருக்கும் என் அன்பும் நன்றியும்..
என் மனைவி, என் அம்மா, ஸ்வர்ணா மற்றும் தொடர்ந்து நான் எழுதவேண்டும் என்று ஏதோ ஒரு காரணத்தால் என்னை ஊக்குவிக்கும் என் நண்பர்கள். என்னை எப்போதும் நேசிக்கும் என் சகோதரர்களும் அவர்களின் குடும்பமும்.
இந்த புத்தகம் வெளிவர முதல் காரணமான என் விசைத்தோழி ஷஹிதாவிற்கு என் அன்பும்..
என் கதைகளை மகிழ்வுடன் பதிப்பிக்கும் விலாசினி அவர்கள், என்னை விலாஸினியிடம் கொண்டு சென்ற பரமேஸ்வரி அவர்கள் இருவரும் என் நன்றிக்கும், அன்புக்கும் என்றும் உரித்தானவர்கள்.
Tags: veyirpandhal, வெயிற்பந்தல், ராகவன் சாம்யெல், வானவில், புத்தகாலயம்